முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டாக பதவி விலகியமையானது சர்வதேச மட்டத்தில் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதிகளின் பதவி விலகல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளைக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது முற்றிலும் தவறானதாகும்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் ஒரு அரசியல் பிரசாரமாகவே பயன்படுத்திக் கொண்டன. பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களைக் குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அரசியல்வாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலேயே விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும்.
அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதாரண மக்களே இன்று பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.





