மரியாதை ஏனைய மொழி, மதங்களுக்கும் கொடுக்கப்பட்டாலே இலங்கைக்கு விடியல் ஏற்படும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன்ரிவித்துள்ளார்.
அந்தவகையில், பௌத்த மதத்திற்குரிய அந்தஸ்து இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஒன்றாகப் பேணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் இந்திய வம்சாவளியினர், இரண்டாவது தமிழர்கள், மூன்றாவது முஸ்லிம்கள் என இனவெறித்தாக்குதல்கள் தொடர்ந்ததால் இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் இல்லாது போயுள்ளன.
எனவே நாட்டில் மீண்டும் சமாதானம் ஏற்படவேண்டுமானால் முதலில் மொழிகளுக்கு உரிய அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மொழியும் சிங்கள மொழியும் ஒன்றாகப் பேணப்பட வேண்டும்.
அதேபோன்று சமயங்களுக்கான அந்தஸ்தும் கொடுக்கப்பட வேண்டும். பௌத்த மதத்திற்குரிய அந்தஸ்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுக்கும் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த நாட்டில் அமைதி திரும்பும். அந்த நாள்தான் இலங்கைக்கு விடிவு நாளாக அமையும்” என அவர் இதன்போது குறிப்பிட்டார்.






