ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் ஸ்தாபகரான தோழர் பத்மநாபாவின் 29ஆம் ஆண்டு தியாகிகள் தின நினைவுகூரலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் நினைவு கூரல் நிகழ்வுகள் வரும் 19ஆம் திகதி அமைதியான முறையில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.குமரேஸ் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் தியாகிகள் தினம் நினைவு கூரப்படுகின்றமை வழமை.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்திற்கொண்டு தியாகிகள் தினமானது வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்கள் தோறும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் அலுவலகங்களில் தோழர்கள், ஆதரவாளர்களை ஒன்றிணைத்து அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மாவட்ட பொறுப்பாளர்களின் தலைமையில் ஒவ்வெரு மாவட்டங்களிலும் தியாகிகள் தினம் நினைவு கூரப்படவுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கிளிநொச்சியில் கட்சியின் உப செயலாளரும், முன்னாள் வட.மாகாண கல்வி அமைச்சருமான சர்வேஸ்வரன், மட்டக்களப்பில் கட்சியின் உப தலைவர் துரைரட்ணம், மன்னாரில் கட்சியின் பொருளாளராகிய நானும் கலந்து கொள்ளவுள்ளோம்.
மாவட்டங்களின் சூழ்நிலைக்கு அமைவாக மாவட்ட அலுவலகங்களில் இடம்பெறும் தியாகிகள் தின நிகழ்வில் கட்சியின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கின்றோம்.
உரிமைக்காக அரசியலை முன்நிறுத்தி தமிழ் தேசிய உரிமைகளை வென்றெடுப்போம் எனக்கோரி அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.