போசாக்கு குறைவான மக்களுக்குரிய போசாக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விசேட திட்டங்களை இனங்காணப்பட்ட போசாக்கு குறைவான மக்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் அமுல்படுத்த ஜனாதிபதிசெயலகம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
இதன்படி இனங்காணப்பட்ட அனுராதபுரம், மன்னார், இரத்தினபுரி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த விசேட திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி செயலகம் முன்வந்துள்ளது.
இதற்கமைய போசாக்கு குறைவான மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த விசேடதிட்டத்தினை அமுல்படுத்துவது பற்றிய திட்டமிடும் விசேட செயலமர்வொன்று இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்செயலமர்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறையே சில தொற்றாநோய்களுக்கு காரணியாக அமைவதாகவும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களிடத்தில் போசாக்கு குறைபாடு காணப்படுவதாக இனங்காணப்பட்டதுடன் எதிர்காலத்தில் இதனைத் தடுக்க அமுல்படுத்தவேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.





