LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 29, 2019

தென்மராட்சி காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்த முடிவு

தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் மக்களின்
எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில், காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர், மத்திய சுற்றாடல் திணைக்கள வட மாகாண உதவிப் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரி, கிராம மக்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், “நாம் மறவன்புலோ காற்றாலை மின் உற்பத்தி செயற்பாடுகளை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தோம். ஊர் மக்கள் அனைவரும் இந்தச் செயற்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அபிவிருத்தி என்பது மக்கள் வாழ்வியலைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது.

பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது. அதில் ஒரு காணி அரச காணியா அல்லது தனியார் காணியா என்பதில் பிரதேச செயலகத்திற்கு ஐயம் உள்ளது. யாராக இருப்பினும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

குறித்த காற்றாலை நிறுவனம் மறுவன்புலோ பகுதியில் காற்றாலை அமைப்பதனால் எந்தவித பாதிப்பும் மக்களுக்கு இல்லை என மத்திய சுற்றுலா திணைக்களம் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உரிய அனுமதிகளை குறித்த ஒப்பந்த நிறுவனம் மின்சார சபை ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் குடிமனையில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் தான் காற்றாலைகள் அமைய வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் மறவன்புலோவில் குடிமனைகளுக்கு மிக அருகாமையில் தான் காற்றாலைகள் அமையவுள்ளன. அத்துடன் குளங்களில் காற்றாலை நிறுவனம் நீர் எடுப்பதனை அனுமதிக்க முடியாது” என குறிப்பிட்டார்.

மேற்படி கருத்துக்களை ஏற்றுக்கொண்ட குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தினர் தாம் மின்சார சபையுடன் கலந்தாலோசித்து உரிய அனுமதிகளைப் பெற்று வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மறவன்புலோ பகுதியில் அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7