
நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் மீது டெல்லி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமல் பேசிய காணொளி ஆதாரங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரருக்கு இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதன்படி டெல்லி நீதிமன்றத்திலும் கமலுக்கு எதிராக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் முன்பு, இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையே குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என மனுதாரர் விஷ்ணு குப்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும் ஆதாரங்களை ஆய்வுசெய்த பின்னர் கமலுக்கு அழைப்பாணை அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறினர்.
இந்நிலையில் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை ஓகஸ்ட் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
