வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி பிரிவில் நாற்பதாயிரம் ஹெக்டேயர் இயற்கை காடுகளை பாதுகாக்க தேவையான உத்தியோகத்தர்களையும், ஆயுதங்களையும் வழங்க வேண்டும் என வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி பிரிவிலுள்ள வனங்களை பாதுகாக்கும் போது ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்;சேனை வட்டார வன இலாகா அதிகாரி பிரிவில் நாற்பதாயிரம் ஹெக்டேயர் இயற்கை காடுகள் காணப்படுகின்றது. இதனை பாதுகாப்பதற்கு என்னோடு சேர்த்து பன்னிரண்டு உத்தியோகத்தர்கள் மாத்திரம் உள்ளனர்.
ஆனால் எங்களுக்கு போதுமான உத்தியோகத்தர்கள் இல்லாமல் காணப்படுகின்றது. எங்களுக்கு உடனடியாக உத்தியோகத்தர்களை நியமித்து தரவேண்டும். அத்தோடு எமது உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பகல் அல்லது இரவு நேரங்களில் கடமையாற்றுவதற்கு பயந்து காணப்படுகின்றார்கள். குடும்பிமலை பகுதியினை பல வருடங்களில் பின்னர் தான் இராணுவம் கைப்பற்றியது. ஆனால் 25236 ஹெக்டேயர் காடுகளை பாதுகாக்க ஒரு உத்தியோகத்தர் கடமை செய்கின்றார்.
காடுகளிற்குள் செல்வதற்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும், ஆயுதம் இல்லாமலும் செல்கின்றார். அத்தோடு யானை உட்பட மிருகங்களின் தாக்குதல்களுக்கு பயந்து எந்தவித பாதுகாப்பும் இன்றி எனது உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றார்கள்.
மரண பயத்தோடு தமது தொழிலை செய்ய வேண்டும் என்று கடமையாற்றிக் கொண்டு வருகின்றார்கள். இது வேதனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. இதுவிடயமாக உயர் அதிகாரிகளுக்கு பல தடவை தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே எதிர்காலத்தில் எமது வனங்களை பாதுகாப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களையும், ஆயுதங்களையும் வழங்கி வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி பிரிவிலுள்ள நாற்பதாயிரம் ஹெக்டேயர் இயற்கை காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.