
சினமன் கிராண்ட் விடுதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த தொழிற்சாலை குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படுவதோடு, அங்கு வேலைசெய்தவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு வேலை செய்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த மொஹம்மட் வைஸ் மொஹம்மட் சல்மான் நூர் பாரிஸ் என்பவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு மேலதிக நீதிவான் பியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்துவரும் 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
