அத்துடன், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை ஆரம்பித்து அந்தப் பகுதியையே நாசமாக்கிய வேதாந்தா நிறுவனம் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளையும் சுடுகாடு ஆக்குவதற்கு மோடி அரசு வழிவகுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதை உடனே இரத்துச்செய்ய வேண்டும்.
கிழக்கு கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் ஏற்கெனவே நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் விழுப்புரம், புதுவை பகுதிகளில் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும்.
இந்தத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு வாய் மூடி மௌனம் காக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற சுயநலத்துக்காக தமிழக மக்களின் நலன்களை அடகுவைக்க தமிழக அரசு துணைபோவது கண்டனத்துக்குரியதாகும்.
இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த உரிமங்களை இரத்துச் செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், மோடி அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைபோனால் அதற்கான அரசியல் விலையைத் தர நேரிடும் என சுட்டிக் காட்டுகின்றோம்” என அவர் அறிக்கையில், தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.