சிங்கள நாளிதழ் ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்ட இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் இன்று கேள்வியெழுப்பி உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியொன்று குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். இதில் சத்திர சிகிச்சை செய்யும் தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளார். இது குறித்து சாட்சியங்களுடன் தகவல் வெளிவந்துள்ளது.
குறித்த வைத்தியரை கைதுசெய்ய தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என குறித்த பத்திரிகைச் செய்தியை தலைப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் காரணியாக அமையும். இதனால் ஏனைய இன மக்கள் முஸ்லிம் வைத்தியர்கள் எவரிடமும் செல்லாது தவிர்க்க வாய்ப்புகள் உள்ளன.
அதையும் தாண்டி இது இனவாத பிரச்சினைகளை உருவாக்கும் காரணியாக அமையும். ஆகவே இந்த செய்தி குறித்து அரசாங்கம் உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.
குறித்த வைத்தியர் 7 ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்துள்ளார் எனவும் அதில் நான்காயிரம் சிகிச்சைகளில் பெளத்த சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துள்ளார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என்பதையும் கூற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.