27 நகரங்களின் மக்களை பலவந்தமாக இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டாபய ராஜபக்ஷ அபிவிருத்தியை மேற்கொண்டார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.ஆனால், வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “நகர அபிருத்திக்கு பொறுப்பாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நகரங்களை அபிவருத்தி செய்யும்போது பலாத்காரமாகவே மக்களின் காணிகளை பெற்றுக்கொண்டார்.
27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவ்வாறான எந்த நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்துக்கமையவே காணிகளை பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
அவ்வகையில், மத்திய நெடுஞ்சாலையை எதிர்வரும் ஓகஸ்ட் இறுதிக்குள் திறந்துவைப்போம்” என அவர் குறிப்பிட்டார்.





