நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சபதமிட்டுள்ளார்.அத்துடன் இந்த வெற்றியுடன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.
இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். இதனை உறுதியாகச் சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன்னர் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சொன்னேன்.
நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் ‘அடிக்கல்’ பிரதமர் தான்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு காலமாக இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் மோடிக்கு இப்போது தான் வந்திருக்கிறது. பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை டெல்லியில் உள்ள பா.ஜ.க நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சி இலஞ்சம், ஊழல் என்பவற்றுடன் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.





