நைஜீரியாவில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன பிற்போடப்பட்டமைக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையத்தலைவர் மஹ்மூட் யாகூப் வருத்தம் தெரிவித்துள்ளார்.தலைநகர் அபுஜாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு வருந்துகின்றேன். ஆனாலும் தேவையறிந்தே தேர்தல் பிற்போடப்பட்டது.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதும் எனது பொறுப்பு என்பதை மறந்தவிட கூடாது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையகத்தை நான் பொறுப்பேற்றவுடன், எப்போதும் திறந்த மனதுடனும், வெளிப்படை தன்மையுடனும் செயற்படுவதாக தெரிவித்திருந்தேன்.
எனவே இந்த விடயத்தில் நான் அதை கடைபிடித்துள்ளேன் என நம்புகின்றேன். தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது தீவிரவாத அச்சுறுத்தலோ காரணம் அல்ல மாறாக நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த சனிக்கிழமை மீண்டும் தேர்தல்கள் நடத்தப்படும் என உறுதியளிக்கின்றேன்“ என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு நைஜீரிய வாக்காளர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தேர்தலில் வாக்களிக்க ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் உறங்கி எழுவதற்குள் தேர்தல் பிற்போடப்பட்டமை வியப்புக்குரியது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஒத்திவைப்பு நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை, தேர்தல் நடத்தப்படும் வரை நாட்டில் வன்முறைகளுக்கு இடம் அளிக்க கூடாது என ஜனாதிபதி மொஹமது புகாரியின் நைஜிரிய மக்களை கேட்டுள்ளார்.
சகல இன மக்களும் ஒற்றுமையுடனும், தேசபற்றுடனும் நடந்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டு மக்கள் தேர்தல்கள் ஆணையகத்துக்கு மதிப்பளித்து அமைதியுடன் தமது அன்றாட கடமைகளை ஆற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அடிகு கேட்டுள்ளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில், நைஜீரியாவின் வட பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 66 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை, நைஜீரியாவில் நேற்று நடைபெறவிருந்த தேர்தல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமைக் குறிப்பிடதக்கது.





