
வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும், கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களுக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிப்பு.!
கிழக்கு மாகாண தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா. அன்பழகன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. ஜெயராஜாவுக்கு இன்று (16) கிழக்கில் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர் விடயமாக மகஜர் ஒன்றினைக் கையளித்தார்.
மகஜரில் தெரிவிக்கப்பட்ட விடயம் வருமாறு.
கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டராசிரியர்களின் பெயர்ப் பட்டியல் மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அமைச்சரவை அங்கிகாரம் வடமாகாண தொண்டராசிரியர்களோடு சேர்த்து கிடைக்கப்பெற்றது.
ஆனால் வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும், கிழக்கு மாகாணத் தொண்டராசிரியர்களுக்கு இதுவரையும் நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர்.
09-03-2018 ஆம் திகதி மத்திய கல்வி அமைச்சினால் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்த 445 பேருடைய பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது .
இக்கடிதத்தின் பிரகாரம் 445 பேருடைய பெயர்ப்பட்டியலை அனுப்பாமல் மாகாணக் கல்வி அமைச்சில் முறைகேடான நேர்முகத் தேர்வை நடத்தி அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்த 445 பேரில் 111 பேர்வரை நீக்கிவிட்டு சம்மந்தமே இல்லாத புதியவர்களை உள்வாங்கி 456 பேர் கொண்ட பெயர்ப்பட்டியலை வெளியீட்டு மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளைச் சந்தித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
எங்களுடைய பிரச்சினைகளை மனித உரிமைகள் ஆணைக்குமு, திருகோணமலை மேல் நீதிமன்றம் வரைசென்று நீதி கேட்டோம் அதற்கு அமைவாக அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்த 445 பேருக்கும் மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுக்கு 12-11-2018 ம் திகதி வருமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டது.
445 பேரும் நேர்முகத் தேர்வுக்கு தயாராகிய போதும் மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடப்பட்டுள்ளதாக 05-11-2018 ம் திகதி கடிதங்கள் அனுப்பப்பட்டது.
எனவே இதுவரைக்கும் மீண்டும் இந்த நேர்முகத்தேர்வுக்கான எந்த வொரு முன் ஏற்பாடுகளையும் காணவில்லை ஆகவே இவ்வாறு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்த இந்த 445 பேருக்கும் முதல் கட்டமாக நேர்முகத் தேர்வை நடத்தி நிரந்தர நியமனம் கிடைப்பதற்கு ஆவாண செய்து தருமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ . அச்சுதன்)





