(பாண்டி)
போதைப் பொருள் பாவனையில் கைது செய்யப்படுபவர்களின் சிலர் குற்றவாளிகள் இல்லை என கிழக்கு மாகாண கல்வி கலாச்சார அமைச்சின் செயலாளர் முத்து பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தின் 2018ம் ஆண்டுக்கான மாணவர் கௌரவிப்பு விழா பாடசாலை அதிபர் செய்னம்பு ஹமீட் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சில கடவுச்சீட்டு விற்பனை முகவர்களும் உதவி செய்கின்றார்கள். போதைப் பொருள் பாவனையில் கைது செய்யும் குழுக்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் சிலர் போதைப் பொருள் பாவனை செய்யாதவர்களும் கைது செய்யப்படுகின்றார்கள். இது தவறான செயலாகும்.
தேசிய பாடசாலை என்றால் அது ஒரு பெரிய பாடசாலை என்று இல்லை மத்திய அரசின் கீழ் நிர்வகிக்கப்படுவதால் ஓரளவு அதிகமான வளங்கள் மாத்திரம் கிடைக்குமே தவிர மாகாண பாடசாலைகள் போன்றுதான் இயங்கும்.
சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் போது அவர்களை மாத்திரம் அழைக்காமல் ஏனைய மாணவர்களையும் அழைத்து விழா நடாத்தினால் அவர்களுக்கும் உற்சாகமாக இருப்பார்கள் என்றார்.
இந்நிகழ்வின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்வி பணிப்பாளர் உமர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் எம்.வி.முஸம்மில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.எஸ்.அப்தாப் அலி, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி.அமீஸ்டீன், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.றகுமான், இளைஞர் இணைப்பாளர் ஏ.எஸ்.அரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் சித்தி பெற்ற மாணவர்கள் அதிதிகளால் பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.














