(பாண்டி)
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு திண்மக் கழிவகற்றும் கொம்பக்டர் வாகனத்தினை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வாக்குறுதி வழங்கியுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்; பங்குபற்றுதலுடன் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் முக்கிய கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான கலந்துரையாடலாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், விஷேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் தேவைப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை சார்பாக தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன், பிரதேச சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைக்காக கழிவகற்றும் கொம்பெக்டர் வாகனம் ஒன்றினை வழங்குமாறு கோரி தவிசாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை இராஜாங்க அமைச்சர் ஏற்று இரு மாத காலத்திற்குள் இவ்வாகனத்தை வழங்க நடவடிக்கையெடுப்பதாகவும் வாக்குறுயளித்தார்.
மேலும், முன்னுரிமை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்திப் பணிகள் குறித்த முன்மொழிவுகளையும் தவிசாளர் இராஜாங்க அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
பிரதேச சபையின் வேண்டுகோளினை ஏற்று கொம்பெக்டர் வாகனத்தை வழங்குவதற்கு வாக்குறுதியளித்த இராஜாங்க அமைச்சருக்கு பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.








