முகமது ஹனீப் சையது என்ற இவர், மாரடைப்பு ஏற்பட்டே மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் முகமது ஹனீப் சையது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாமென நாக்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராணி போஸ்லே தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனையின் மூலம்தான் உறுதியாக தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
அண்மையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவேற்பட்டதையடுத்து உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 2003ஆம் ஆண்டு ஒகஸ்ட் 25ஆம் திகதி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதில் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஹனீப் சையது உள்ளிட்ட 3 பேருக்கு மும்பை பொடா சிறப்பு நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






