மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 உறுப்பினர்களையும் ஏன் காப்பாற்றினார்கள் எனபதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.நாடாளுமன்ற அமர்வில், கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர் அந்தளவுக்கு மக்கள் விரக்தியடைந்துருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் மின்னுயர்த்தியினுள் 12 உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டமை தொடர்பில் இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள்வரை பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இங்குள்ள சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 பேரையும் ஏன் காப்பாற்றினார்கள்? அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம். வீணாக காப்பாற்றிவிட்டார்கள், மின்னுயர்த்தி செயலிழந்து விழுந்திருக்கலாம் என மக்கள் சபித்துள்ளனர்.” என கூறினார்.





