“போதைக்கெதிரான பாடசாலையின் பலமிக்க ஆதரவு" எனும் தொனிப்பொருளில் கல்வியமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை உயர் தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு பிரதேசத்தில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற இப்பேரணியில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவு, சமுதாய சீர்திருத்த திணைக்களம், வாழைச்சேனை பொலிஸார், ஓட்டமாவடி பிரதேச சபை,பிரதேச விளையாட்டுக்கழகங்கள் என பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன.
மாணவர்களின் பேரணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி பல நோக்கு கூட்டுறவு சங்க வீதி, ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி, பிரதான வீதி வழியாக பொலிஸ் நிலைய சந்திக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.
பாடசாலை மாணவர்களால் பொது மக்களுக்கு போதையால் ஏற்படும் தீமைகள் தொடர்பான துண்டு பிரசுரங்க வினியோகிக்கப்பட்டதுடன் தனது வாழ்வில் ஒரு போதும் போதை தரும் பொருட்களைப் பாவிக்கமாட்டேன் என உறுதி கூறி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தம் அடையாளக் கையொப்பத்தினை இட்டனர்.





