குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர், பதிவுசெய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அந்த வகையில் டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
முடியவில்லையெனில் , ஒரு பொது சின்னத்தை ஒதுக்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தில், ''இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. தற்போது எங்களிடம் 20 எம்.எல்.ஏ.க்களும், 6 எம்.பி.க்களும் உள்ளனர். ஏற்கெனவே 137 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் அணி மாறி விட்டனர்
ஒரு பொதுவான பெயரும், சின்னமுல் இல்லை என்றால் எப்படி நாங்கள் அரசியலில் ஈடுபட முடியும். தேர்தல் நெருங்கும் வேளையில் எப்படி சின்னம் இல்லாமல் அரசியல் செய்ய இயலும்'' என பேசினார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில்,''அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சியாகப் பதிவு செய்ய முடியுமா? ஏற்கெனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகி தற்போது சிறையில் உள்ளார்.
இதன் அடிப்படையில் இவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கூடாது, ஏனெனில், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் டிடிவி , சசிகலா அணியால் பெரும்பாலான எம்.பி, எம்எல்ஏ.க்கள் இருந்தனர், தொண்டர்களும் இருந்தார்கள். ஆனால், அதேவேளையில் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
அதேபோல மற்றொரு நிர்வாகியாக இருக்கக்கூடிய டிடிவி தினகரன் மீதான வழக்கில் தற்போது டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளை தலைவர்களாகக் கொண்ட கட்சியில் இருக்கக்கூடாது என்ற காரணத்தால் பெரும்பாலானோர் எங்கள் அணியில். இணைந்துவிட்டனர்'' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட டிடிவி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''தற்போது தமிழக முதல்வராக இருக்கும் ஈ.பி.எஸ் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது'' என்று நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ''இரண்டு தரப்பினரிடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது ஒரு தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியதுபோல, டிடிவி தரப்புக்கு ஒரு பொது சின்னத்தை ஏன் வழங்கக்கூடாது?'' என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பினர்.
அப்போது டிடிவி தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், ''இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இடைக்காலமாக குக்கர் சின்னத்தையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மங்களைச் சந்தித்து வாக்கு கேட்க இந்த குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்'' என மீண்டும் கோரிக்கை வைத்தனர்
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அமித் சர்மா, ''அடுத்த ஒரு மாதத்துக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை'' என தெரிவித்தார்.
அப்போது பதிலளித்த டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ''தமிழக இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டாலும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது, எனவே குக்கர் சின்னத்தை இடைக்காலமாகவாவது ஒதுக்க வேண்டும்'' என வாதம் வைத்தார்.
அனைத்து தரப்பினரும், எழுத்துப்பூர்வமான வாதங்களை திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
