சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறிந்தனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தைப் பெற்று அவருக்குச் செலுத்தப்பட்டது.
சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்தது. சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும் அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு இன்று (வியாழக்கிழமை) தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. தானமாக அளிக்கப்பட்ட ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காதது ஏன்? கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன, சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என உயர் நீதிமன்ற அமர்வு அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது