
(குகா)
கிழக்கு மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக்கட்டதிக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அருண ஜசேகர, இராணுவத்தினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை கட்டங் கட்டமாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெனரல் கே.பி.அருண ஜசேகர மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் , அபிவிருத்தி முன்னெடுப்புகள், மக்களது நிலைமைகள் குறித்தும் அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுதத் சேவவிதான மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு ஞாபகச் சின்னம் ஒன்று கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.








