ஆன்அவரது சொந்த மண்ணான நசரேத்தூரில் தொழுகைக் கூடத்தில் தன்னிடம் ஏசாயா இறைவாக்கினர் எழுதிய வார்த்தைகள் படிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட போது, அவர் எதற்கு வந்தாரோ அவை அங்கே தரப்பட்டிருந்தது. அவர் வந்த நற்செய்தி அறிவிக்கும் பணி குறித்து அங்கு தெளிவு படுத்தப்பட்டிருந்தது.
தாம் அருள்பொழிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதை அவர்களுக்கு அறிவிக்க, அன்று அவர் வாசித்த அந்தப் பகுதி அவரிலே அன்று பூரணமாயிற்று என்று அவர் பகிரங்கப்படுத்தியபோது அவர்களது வன்மம் உச்சந் தொட்டது. “இவன் யார் அதைச் சொல்ல? மேலானவர்கள் நாமிருக்க யார் இந்த அதிகாரத்தை இவனுக்குக் கொடுத்தது? முதலில் இதைச் சொல்ல இவனுக்கு என்ன தைரியம்? யார் இவன்? அந்தப் பெண் மரியாளின் மகன்தானே இவன்? தச்சன் யூசை இவனுக்கு அப்பனில்லையா? நாமறியப் பிறந்து வளர்;ந்தவன் நமக்குத் தெரியாத வழியை நமக்குக் காட்ட இவனுக்கு என்ன தகுதியிருக்கிறது? என்றபடி ஒரு சலசலப்பை அந்த மக்கள் மத்தியில் கிளப்பி விடுகிறார்கள். அந்த மாக்களும் நம்மில் ஒருவன், நம் மத்தியில்; ஓடியாடி விளையாடித் திரிந்தவன், இப்படி அருள் வாக்கு உரைப்பதும், அறிஞர்க்கீடாக பேசுவதும் நமக்குப் பெருமைதானே? என்று தன்மையாய் சிந்திக்க முனையவேயில்லை. அவர்களும் அவரை ஏளனமாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
இயேசு அவர்களுக்கு யதார்த்தம் என்னவென்று புரிய வைக்கின்றார். அவர் அந்தப் பேதைகளை நோக்கி “ஒரு இறை வார்த்தையாளன் தன் சொந்த மண்ணில் என்றுதான் உயர்வாக மதிக்கப்பட்டான்? நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால் சுற்றயல் பகுதிகளில் நான் செய்தவற்றில் சிறிதளவையேனும் எங்கள் மண்ணில் செய்யும் என்று கேட்டிருப்பீர்கள். எத்தனையோ தடவைகளில் கடவுளுடைய அருள் மாற்றானிடத்தில்தான் வெளிப்படுத்தப்பட்டதேயல்லாமல் அவரது சொந்த மக்கள் இஸ்ராயலர்க்கு அந்த வரம் கிட்டவில்லை” என்று தக்க உதாரணங்களுடன் எடுத்துச் சொன்னபோது, அவர்களால் அவர்களுக்குள் எழுந்த வன்மத்தை, கோபத்தை, வெறுப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் மீது வன்முறையைக் காண்பிக்க முனைகின்றனர். அவரும் சிரித்தபடியே அவர்களை எண்ணி வருந்தியவராய் அவர்கள் நடுவே நடந்து போய் அவர்களது இயலாமையை அவர்கள் கண்டு கொள்ளும்படி செய்கிறார்.
நாமும் பல வேளைகளில் நம் நடுவே உறைகின்ற தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்வதில்லை. அடுத்தவர் வடிவில் அவர் உறைகின்றார் என்கின்ற உண்மையை நாம் பல வேளைகளில் வசதியாக மறந்து விடுகின்றோம். பக்கத்தில் ஏழையின் வடிவில் அவரைக் கண்டும். அவரை அடையாளம் கண்டு கொள்ளாமல் ஆலயங்கள் தோறும் அவரைத் தேடித் திரிகின்றோம். அவர் நம்மவர், நம் நடுவே வாழ்பவர். இதை விடவும், நம்மை விடவும் அறிவிலும், ஆற்றலிலும், தகமையிலும், தகுதியிலும் உயர்வானவரை நாம் நம் மத்தியில் அடையாளம் கண்டு அவர்களை ஊதாசீனம் செய்யாது அவருக்கும் உரிய மதிப்பை வழங்குவது நம் கடமை.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்