(தொடர்ச்சி)அருளாளர் பிரெடெரிக் ஓஸானத்துடைய வாழ்வும் ஒன்றும் மெத்தையில் சுகம் காணுகின்ற வாழ்வாக இருக்கவில்லை. வறுமை அவரையும் வாட்டியது. குறிப்பாக இளவயது வறுமை அவரைப் பாதித்தது. ஒரு கட்டத்தில் தனது வருமானம் தன் தாயைக் கவனித்துக் கொள்ளப் போதவில்லையே என்று கலங்கி நின்றவர்தான் அவர்;. ஆனாலும் அந்த வறுமையால் அவரை வெறுமையாக்க முடியவில்லை. தனக்குக் கிடைத்ததுதான் தனக்கென இறைவனால் வழங்கப்பட நியமிக்கப்பட்டது என்பதை அவர் ஏற்றுக் கொண்டு அதில் நிறைவைக் கண்டுவிட முயன்றார். தன் அறிவால், ஆற்றலால், கல்வியால் உயர்வு கண்டார். வறுமை அவரை வெறுமையாக்கவில்லை. மாறாக, அந்த வறுமை அவரது உயர்வு நோக்கிய பாதையில் பயணிக்க உந்து சக்தியாக மாறியமைந்ததை அவரது வரலாற்றைப் படிப்பவர்களுக்குப் புரியும்.
வறுமையும், வெறுமையும் கூடப் பிறந்த சகோதரர்கள் மாதிரி என்று நினைத்து ஒடுங்கிப் போகின்றவர்கள் மத்தியில் தம் உறுதியால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கியவர்கள். நமக்கு முன்னோடிகளாக அவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை பற்றிய பெரும் கனவுகள் இருந்தன. ஆசைகள் மனதில் எழுந்தன. இறைவனிடம் அவர்கள் அதை நிவர்த்தி செய்ய வரம் கேட்காமல் வாழ்ந்தார்கள் என்று சொல்லி விடமுடியாது. தாங்கள் விரும்பிய வசதி வாய்ப்புக்களை அவர்கள் வரமாகக் கேட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு அவை தரப்படவில்லை. மாறாக, அவர்கள் தமக்குக் கிடைத்ததை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை நிறைவாக மாற்றியமைக்க, அவற்றைப் பயன்படுத்தினார்கள். அதனால்தான அவர்கள் உயர்வு பெற்றார்கள்.
ஆம். நாம் எதிர்பார்க்கின்றவை எமக்குக் கிடைக்காமல் போகின்றபோது வாழ்வில் சோர்ந்து போகின்றவர்களாகவோ, குறுக்கு வழி நாடுகின்றவர்களாகவோ, நம்மை மீறி, நமது தகமை மீறி செயற்படுகின்றவர்களாகவோ நாம் அமைகின்றபோது துன்ப துயரங்கள் நம்மை விரட்டவே செய்யும். மாறாக, நாம் கேட்டவை கிட்டாமல் போவது தெய்வ சித்தம் என்று, கிடைத்தவை மட்டில் மன நிறைவைக் காண முற்படுவதும் அதற்காக உழைப்பதும் நமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்கும். நம் வாழ்வில் மன அமைதியை தோற்றுவிக்கும்.
எது நமக்குக் கிடைக்கின்றதோ அதுவே இறை சித்தம் என்ற மனப்பக்குவம் நம்மில் உருவாகி அதில் மன நிறைவை நாம் கண்டால் வறுமையும் வெறுமையும் நம்மை எதுவும் செய்து விட முடியாது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்





