
கடந்த 14 ஆம் திகதி நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கான ஹன்சார்ட் அறிக்கையில் பொய்த்தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (புதன்கிழமை) உதய கம்மன்பில நாடாளுமன்ற ஹன்சார்ட் ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
14 ஆம் திகதிக்குரிய ஹன்சார்ட் அறிக்கையின் திருத்தப்படாத பிரதியில் நாடாளுமன்றத்தில் இடம்பெறாத விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தினம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் சபாநாயகர் அவரது உரையில் ‘இதற்கு பெரும்பான்மை இல்லை. என தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ‘இவர்களுக்கு பெரும்பான்மை இல்லை’ என்ற சொற்றொடர் ‘அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை’ என மாற்றப்பட்டுள்ளது என்றும் இது அன்றைய நாளுக்குரிய காணொளிகளூடாக உறுதி செய்ய முடியும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த கடிதத்துடன் காணொளிகளையும் இணைத்து அனுப்பியுள்ள உதய கம்மன்பில, இது குறித்து தேவையான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஹன்சார்ட் ஆசிரியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
