பாலர் வகுப்பு தொடக்கம்
உயர்தரம் வரை
ஒன்றாக வந்த நண்பனே
ஏன் இந்த அவசரம்
இடை நடுவே
உன் பயணம்
தடைப்பட்டதேனோ?
உன் அமைதியான
அந்த புன்னகை
இன்றும் எம்
நினைவுகளின் நீட்சியாய்
பள்ளி நாட்களில்
கல்லூரி வாழ்க்கையில்
நாம் கூடித்திரிந்த
வீதிகள் எங்கும்
உன் வாசம்
ஓடித்திரிந்து
விளையாடிய மைதானமெங்கும்
உன் பாதம் பதிந்த
புற்களில்
உன் மென் சிரிப்பின்
பனித்துளிகள்
சுஜீவ்
உன் கரம் பற்றித் திரிந்த
கோணேசர் கோயில்
வீதியெங்கும்
சுற்றித் திரியும்
மான்கள் முகத்திலும்
சோகம் தெரிகிறது
உன்னைக்காணாத
ஏக்கம் புரிகிறது
நீ
மறைந்தாலும்
உன் நண்பர்கள் நாம்
சேரும் இடமெங்கும்
உன்
பெயரே அதிகம்
உச்சரிக்கப்படுகிறது.
காலங்கள் கடந்தாலும்
எம் ஞாபக இடுக்குகளில்
என்றும் நீ உயிர்
வாழ்வாய்.
2020 நண்பர்கள்