LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 16, 2018

கோரதாண்டவம் ஆடும் கஜா



வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே நள்ளிரவு தொடங்கி அதிகாலையில் கரையை கடந்ததது. அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயலான கஜா, நேற்று இரவு நாகையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கிய நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் நாகப்பட்டினம் - வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
கஜா புயல் கரையை கடந்த போது கடலூர் - பண்ருட்டி சாலையில் மரங்கள் முறிந்ததுடன் மின்கம்பங்களும் கீழே விழுந்தன. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்தனர். கடலூர் - நாகை சாலையில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால், வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தன்பேட்டையில் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. இதேபோல், வேளாங்கண்ணியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், பேருந்து நிலையத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுமார் 82 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு மாநில அரசு சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாம்பன் பாலம் மூடப்பட்டது. கடந்த 31 ஆண்டுகளில் பாதுகாப்பு கருதி பாம்பன் மூலம் மூடப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு

கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் 111 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், விழுப்புரம், கரூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7