
நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எனவே அவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த மாதம் பதவியேற்ற புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், புதிய அமைச்சர்களும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
எனவே இவர்கள் உடனடியாக பதவி விலகவில்லையெனில் ஜனநாயக விரோதிகளாவர். நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து தனது கடமையை நிறைவேற்ற மகிந்த தவறிவிட்டார்.
இதேவேளை அமைச்சுப் பதவிகளும், பணமும் வழங்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்க மகிந்த அணி முயற்சித்தமை நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
(ஏ.நஸ்புள்ளாஹ்)
