நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எமக்கே காணப்படுகின்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பை மீள திரும்பப் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனை நாங்கள் தேவை ஏற்படும்போது காட்ட தயாராக இருக்கின்றோம்.
120 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இருந்தனர். என்றாலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததால் மீண்டும் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இருந்த இடங்களுக்கே சென்றனர்.
ஆனால் தற்போது எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது. அதனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முன்னுக்கு செல்லும். அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வோம்” என கூறினார்.





