LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல்-ஓர் ஆரம்பமுயற்சி-4

பேராசிரியர் சி. மௌனகுரு 

இது இந்நெடும் கட்டுரையின் நான்காம் பகுதி.இதில் கூத்து கட்டுடைத்துப்பார்க்கப்படுகிறது,அத்தோடு கூத்தின் அதிகாரம் எங்கு இருக்கிறது என்று காட்ட வும் படுகிறது

கூத்தையும் கூத்தின் கருத்தியலையும் அதன் ஆற்றுகையையும் கட்டுடைத்துப்பார்த்தல்

கூத்தின் கதைகள் அனைத்தும் இரண்டு எதிர்மறைகளுக்கிடையில் நடக்கும் மோதல்களையே கூறுகின்றன.
பாண் டவர் க்கும் , துரியோதனாதியருக்கும் நடக்கும் போர் தர்மவான்களுக்கும் அநீதியாளருக்கும் நடக்கும் போராகக் காட்டப் படுகிறது.
இராமாயணக் கூத்தில் இராமன் ஒருபுறம் இராவணன் ஒருபுறம் நிறுத்தப்படுகின்றான்
இராமன் நல்ல குணங்கள் யாவும் வாய்க்கப் பெற்ற அனைவர் மீதும் அன்பு செலுத்துகின்ற ஏகபத்தினியாளனாகவும்,
இராவணன் கெட்டகுணங்கள் வாய்க்கப் பெற்ற அனைவர் மீதும் காழ்ப்புடைய, தன் மனைவியிருக்க சீதையென்ற பிறன் மனைவியை விரும்புவனாகவும் காட்டப்படுகின்றான்.
நீதியின் காவலன் இராமன் –
அநீதியின் காவலன் இராவணன்.
எந்தக் கூத்தின் அமைப்பினை எடுத்தாலும் இவ்எதிர்நிலைத் தன்மையினைக் காணலாம்.
இக் கூத்து கட்டமைக்கப்பட்ட முறை.
பாண்டவரையும் இராமனையும் நல்லவராகவும் துரியோதனையும் இராவணனையும் கெட்டவராகவும் காட்டும் கட்டமைப்பு முறை
நம்புராணங்களும் இவ்வாறே கட்டமைக்கப்பட்டுள்ளன.
பாண்டவர்கள் மேடையில் தோன்றுகையில்
"பாண்டுபுத்திரர்கள் வந்தாரே"
என்று தான் பாடுவர்
ஆனால் அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் அன்று.
குந்தியின் வயிற்றில் வேறு தந்தையர்களுக்குப் பிறந்த புத்திரர்களே
. துரியோதனன் முதலியோர் தான் திருதராட்டினனின் புத்திரர்.
எனவே ஞாயப்படி அரசுரிமை துரியோதனாதியருக்கே யுரியது.
தங்களுக்குரித்தில்லாத நாட்டை கண்ணனின் உதவியுடன் போர் நடத்திப் பெறுகிறார்கள் பாண்டவர்.
துரியோதனுக்குரிய நாட்டை சமர் செய்து அநீதியாகப் பெற்றனர், என்று யாரும் இதற்கு வியாக்கியானம் செய்வதில்லை.
அதையொட்டிய கிளைக் கதைகள் யாவும் பாண்டவர்களை
நியாயவான்களாகவும்,
துரியோதனனை அநியாயக்காரனாகவும்
காட்டும் வகையிலேயே கட்டியமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெண்ணை ஐந்து ஆடவர் வைத்திருந்தமை,
தன் மனைவியை விட்டுப் பிற பெண்களையும் மணந்த அருச்சுனன்,
வீமனின் பிழையான செயல்கள்,
துரோணரைக் கொல்லப் பொய் சொன்ன தருமர்.
மனைவியின் சம்மதத்தைப் பெறாமல் அவளை தன் அடிமையாக நினைத்து பணயம் வைத்த தருமர்,
பெருவீரனான கர்ணன் நிராயுத பாணியாக நின்று சேற்றில் புதைந்த தேரைத் தூக்குகையில் அவன் மீது அம்பு விட்டுக் கொன்ற கோழை அருச்சுனன்
இவையெல்லாம் பிரதிமூலம் எமக்கு கிடைக்கும் குறிப்புக்கள்
. இவற்றின் மூலம் தருமவான்களான பாண்டவர் அதர்மவான்களாக இருந்தமை தெரிய வரும்.
மனைவி மீது மகா அன்பு கொண்ட துரியோதனன்,
இல்லை என்னாது வழங்கிய கர்ணன்,
தேரோட்டி மகன் என்று குறைத்து மதிக்காது அவன் வீரத்திற்காக அந்த நாட்டை வழங்கி அவனுக்கு நெருங்கிய நண்பனான துரியோதனன்,
தமையன் மீது எல்லையற்ற பாசம் கொண்ட துச்சாதனன்,
மகன் மீது மாபெரும் அன்பு கொண்ட திருதராட்டிரன்
என்று பார்க்கையில் அதர்மவான்கள் எனக் கூறப்பட்டோர் மத்தியிலும் அன்பு, பாசம், இரக்கம், கொண்ட தர்மவான்கள் இருந்தமை தெரிய வரும்
எனவே
தர்மவான்.
அதர்மவான்,
என்று இரு முனைகளில் இவர்களை வைத்தது பிழை என்பதும்
தர்மமும் அதர்மமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதும் தெரிய வரும்.
ஒருவருக்கு தர்மமாகத் தெரிவது இன்னொருவருக்குத் அதர்மமாகவும். ஒருவருக்கு அதர்மமாகத் தோன்றுவது இன்னொருவருக்குத் தர்மமாகவும் தோன்றும்.
கண்ணன் பாண்டவரைத் தர்மத்தைக் காக்க வந்தோராகவும் நால்வகை வருண தர்மத்தை அவர்களே காப்பதாகவும்,
துரியோதனாதியோர் வர்ண தர்மத்தை மீறுவதாயும் கூறி அதர்மம் அழிக்கப் பட வேண்டியது என்று அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்வார்.
அதர்மம் தர்மம் என்ற ஏன் கட்டியமைக்கப்பட்டது என்பதற்கான திறவு கோல் இங்கு தான் கிடைக்கிறது.
வர்ணாச்சிரம தர்மமே இங்கு தர்மமாகவும்
அதை மீறுவது அதர்மமாகவும் கருதப்படுகிறது
. நீதி, அறம், குணம், பழக்கவழக்கங்கள் யாவம் வர்ணாச்சிரம தர்ம சமுக அமைப்புக்குச் சாதகமாகவே கட்டியமைக்கப்பட வேண்டியுள்ளது.
கர்ணன் ஆகிய நல்லவனுக்கு கூட அழிவு உண்டு வர்ணாச்சிரம தர்மத்தின் அமைப்புக்கு மாறான பக்கம் நின்றமையினால், தர்மன் கூறிய பொய் அவ்வமைப்பைக் காக்கவே,
ஏகலைவன் போன்ற திறன்மிக்க சிஷ்யனுக்குக் கூட வில்வித்தை பழக்க துரோணர் மறுத்தது வர்ணாச்சிரம தர்மப்படி வில்வித்தை வேடருக்குரியதல்ல என்பதனாலேயே,
வில்வித்தை(தனுர்வேதம் அதிகாரத்தோடு சம்பந்தப்பட்டது.
வேடன் தனுர் வேதம் அறிந்தால் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வான் என்பதனாலேயே வில்வித்தை துரோணரால் ஏகலைவனுக்கு மறுக்கப்பட்டது.
ஏகலைவன் தன் முயற்சியால் வில்வித்தை கற்ற போது குருதட்சணை என்ற பெயரில் அவன்பெருவிரல் துரோணரால் வாங்கப்பட்டு அவனுடைய வில்லாண்மை குறைக்கப்பட்டது.
இவை யாவும் தர்மம் என்ற பெயரில் நடைபெற்ற அதர்மங்களே
குருபக்தி,
கீழப்படிவு,
தர்மம்மீறாமை,
என்பன அதிகாரத்திலிருக்கும் வர்க்கத்தைப் பலப்படுத்த கட்டியமைக்கப்பட்ட கருத்து நிலைகளேயாகும்.
இங்கெல்லாம் கருத்து நிலை அதிகாரத்தின் பாற்பட்டதாக இருப்பதனைக் காணமுடிகிறது.
ஆனால் இத்தகைய கருத்து நிலைகளை, கட்டியமைக்கப்பட்ட கருத்துக்களை கட்டுடைப்பதாக கூத்தில் சிறு பாத்திரங்களில் முக்கியமாக விழிம்பு நிலைப் பாத்திரங்களின் சொற்கள், செயல்கள் அமையும்
, தருமர் வீமன், அருச்சுனன், கிருஷ்ணனை, அவர்களுடைய தர்மத்திற்கு எதிரான செயல்களுக்காகப் பகிடி பண்ணுகின்ற கட்டியக்காரன்
,பறையன், வண்ணான், வேடன், போன்றோரின் கருத்துக்களில் கட்டுடைத்தலுக்கான அம்சங்களைக் காணுகின்றோம்.
"அந்நியன் ஒருத்தனின் பாதுகாப்பிலிருந்த சீதையை இன்னும் மனைவியாகவைத்திருக்கிறாரே இராமன்,"
என்ற லவகுசா கூத்தில் வரும் வண்ணானின் குரல் இராமன் பற்றிய கருத்துக் கட்டமைப்பைத் தகர்க்கும் குரலாகும்
இப்படிப் பல உதாரணங்கள் காட்டலாம்.
கூத்தின் அளிக்கை முறையிலும் இச் சமூகக் கட்டமைப்பு இடம் பெறுகிறது.
கூத்தின் கட்டமைப்பு நிலப்பிரபுத்துவத்தினைக் கட்டிக் காக்கும் தன்மை கொண்டது.
கூத்தின் பிரதான பாத்திரங்கள் நிலமானியத் தலைவர்களே.
நிலமானிய அமைப்பின் அதிகாரமிக்கவர்களும், ஆழ்பவர்களுமான, அரசன், பிரபுவணிகர்களே, கூத்தின் கதைத் தலைவர்கள்.
பாரதமாயின் பஞ்ச பாண்டவர்கள்,
இராமாயணமாயின் இராமன்,
புராணங்களாயின் நிலமானியக் கடவுள்கள்,
அதுவும் ஆண்கடவுளர்கள்.
கூத்தின் பிரதான பாத்திரங்களும் ஆண் ஆதிக்க பாத்திரங்களே
அல்லி, நல்லதங்காள், பவளக்கொடி என்ற பெண்ணைப் பிரதானமான பாத்திரமாகக் கொண்ட கூத்துக்களாயின் அப் பாத்திரங்கள் ஆணில் தங்கியுள்ளனவாக அல்லது ஆணால் வெற்றி கொள்ளப்படுவனவாகவே அமைக்கப் பட்டிருக்கும்.
நிலமானியத் தலைவர்கட்கு வரும் துன்பங்களும், துயரங்களுமே அங்கு பேசப்படும்.
அவர்கள் தம் துன்பத்தை இன்னல்களைத் தமது முயற்சியால் வெல்வதாகவும் அவர்கள் வெல்லமுடியாத விடத்து இறைவன்வந்துஅதிகாரம் உடையோரின் அத் துன்பத்தை தீர்ப்பதாகவுமே கூத்து (பிரதி) கட்டப்பட்டிருக்கும்.
இவ்வதிகாரப் பிரிவினையை ஆளுவோர், ஆளப்படுவோர்) கட்டிக் காப்பவனவாகவே அவற்றின் அளிக்கை முறைமைகளும் அமையும்.
தெருக்கூத்தை
அங்க அசைவுகள், (ஆங்கிகம்)
ஆபரணம் உடைகள், (ஆஹார்யம்)
பேசப்படும் சொற்கள், பாடப்படும் பாடல்கள் (வாசிகம்)
ஆடல்கள் மூலமாக அளிக்கை செய்யலாம்.
கூத்திலே அதிகாரத்துவம் மிக்க பிரதான பாத்திரங்களுக்கு அலங்காரமான அங்க அசைவுகளும், ஆபரணம், உடைகளும், உயர்ந்த (செந்தமிழ்) பாடல் வசனங்களும், அலங்காரமான ஆடல் ஜதிகளும் கொடுபட்டிருக்கும்.
அதிகாரம் இல்லாத, ஆளப்படுகின்ற தாழ்நிலைப் பாத்திரங்களுக்கு இவை எதுவும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கட்கு அலங்காரமான அங்க அசைவுகள், ஆபரணம், உடைகள், பாடல்வசனம், ஆடல்கள் கிடையாது. அவர்களது அசைவுகள் நகையை விளைவிப்பனவாக இருக்கும்.
ஆடை அணிகளும், ஒப்பனைகளும், ஆடல் ஜதிகளும் பார்வையாளருக்கு அவர்கள் ஆள்வோரை விடக் குறைந்தவர்கள் என்ற கருத்துருவைத் தரும் வகையிற் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலோர் மேலோரே, கீழோர் கீழோரே இது தான் இயல்பு இது மாற்ற முடியாதது என்ற கருத்து நிலை அங்கு மேற்கிளம்பியிருக்கும்.
இக் கட்டமைப்பை உடைத்து நோக்குமிடத்து அதிகாரம் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட விதம் நன்கு தெளிவாகும்.
நிலமானிய ஆட்சி அதிகார அடுக்கு முறைமைகளையும் அரசன், அமைச்சன், ஆட்சி, நிர்வாகம் ) பணி பாட்டு அதிகார அடக்கு முறைமைகளையும்
(மதம், வர்ணதர்மம், சாதிமுறைமை. அதற்கேற்ப வழிபாடு, பழக்க வழக்கம், சட்டம், சம்பிரதாயம்) ஞாயப்படுத்தும் வகையில் அவ்வமைப்பை உளவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கூத்து கட்டமைக்கப்பட்டுள்ளமை கூத்தைக் கட்டவிழ்த்துப் பார்க்கும்போது வெளித்தெரிகின்றது.

(தொடரும்)


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7