
குருமண்வெளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி தனது முப்பத்தி மூன்று வருட ஆசிரியர் பணியிலிருந்து 2018-11-29 இல் ஒய்வுபெற்றுச் செல்கின்றார்.
இவருக்கான பணிநிறைவு பாராட்டு விழா குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது. பிரதி அதிபர் கு.பிரபாகரன் நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.
குருமண்வெளியைச் சேர்ந்த ஆசிரியை சரஸ்வதி விநாயகமூர்த்தி தனது ஆரம்பக் கல்வியை குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர் கல்வியினை மண்டூர் மகாவித்தியாலயத்தில் கற்றிருந்தார். அதன் பின்பு பேராதனிய பல்கலைக்கழகத்தில் பட்டமேற் படிப்பை தொடர்ந்தவர் கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.
1985 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்டார். இவர் குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம், மகிளுர் சரஸ்வதி மகா வித்தியலாயம் ஆகியவற்றில் கல்விப் பணியாற்றியுள்ளார். அதிலும் அதிக காலம் தான் கற்ற பாடசாலையான குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் 27 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.
குருமண்வெளிக் கிராமத்திற்கு நிறைந்த கல்விப் பணியாற்றியுள்ளார். சிரேஸ்ட ஆசிரியை திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தியிடம் கல்வி கற்ற பலர் இன்று அரச பணியில் உயர்ந்த சேவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செ.துஜியந்தன்
