LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, November 24, 2018

இறைத் தொண்டன்-25

(தொடர்ச்சி)


இயேசுவின் வாழ்க்கையைப் பின்பற்றி இறைவனின் தொண்டனாக மாறுவது சிரமமான செயலென்றாலும் அந்த இறைவனின் அருளினால் அது நிச்சயம் கை கூடும். ஆவியானவரின் வழிகாட்டலும் வல்லமையம் எந்த கடினமான பாதையாயினும் அதில் தடையின்றி பயணம் செய்ய வேண்டிய ஞானத்தையும், விவேகத்தையும், தைரியத்தையும் எமக்கு அளிக்கும்.

இயேசுவை நேரடியாக அனுபவித்தவர்களே, அவரது நன்மைத் தனத்தைக் கண்டு வியந்தவர்களே அவர் முன்னிலையில் இவர் சொல்வதை நாம் எப்படிச் செய்ய முடியும்? இவரை எப்படி நாம் பின்பற்றுவது என்று கேட்டவர்கள்தான். யோவான் நற்செய்தி 6ம் அதிகாரத்தில் இதை நாம் காண்கின்றோம். அவர்கள் சொல்வதோடு நின்று விடமால் அவரை விட்டு நீங்கவும் தலைப்படுகின்றார்கள். பொழுது போக்கிற்காக அவர் வார்த்தையைக் கேட்டுப் போக வந்த மனிதர்கள் போன்று தமக்குப் பொருந்தாத கட்டம் என்று கண்டதும் வெட்டிக் கொண்டு போகின்றவர்களாக அவர்களை நாங்கள் காணுகின்றோம்.. எல்லோரையும் புரிந்து கொண்டிருந்த இயேசு தன்னோடு நிலைத்திருந்த பன்னிருவரைக் கேட்கின்றார் அவர்களது முடிவு என்னவாக இருக்கப் போகின்றது? பேதுரு தெளிவான முடிவைச் சொல்லுகின்றார். 'வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமிருக்க. நாம் யாரிடம் போவோம்' என்ற ஞானம் மிக்க இந்த வார்த்தைகள் வழியை இயேசுவிடம் கண்டு கொண்ட ஒரு தொண்டனுடைய வார்த்தைகள்! தன்னை முற்றிலுமாக இறை சித்தத்திற்கு அர்ப்பணித்த ஒருவருடைய வார்த்தைகளல்லவா இவை! இவ்வாறான ஒரு மனப்பக்குவம்தான் இன்று நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள எமக்குத் தேவையாக இருக்கின்றன.

'வாழ்வும் வழியும் நீயாக இருக்க, என் வாழ்வைக் கொண்டு நடத்த உறுதுணையாக இருக்கக் கூடிய உன்னை விட்டு விலகுதலுமில்லை தடம் புரள்வதுமில்லை' என்று சொல்லக் கூடிய ஒரு உண்மையான தொண்டனுக்குரிய இயல்புகளை எம்மிடத்திலே நாம் வளர்த்துக் கொள்வோம்.. 

இதற்கு இறை சித்தம் என்பது அவசியம்! தூய ஆவியின் அருள் உதவி;யானது நிரம்பத் தேவை. இயேசுவின் வாழ்ந்து காட்டும் வழிகாட்டுதல் நமக்குத் தேவை. இவை மூன்றும் எமக்குக் கிட்டாத வரையில் சீரிய வழியில் பயணம் செய்யும் வாழ்க்கை நமக்குக் கிட்டப் போவதுமில்லை, நமது வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் நாம் அனுபவிக்கப் போகும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் மனிதர்களாக நாம் வாழப் போவதுமில்லை.

அவர் காட்டும் வழியைப் பின் பற்றுகின்ற போது அவர் நம்மை 'பசும் புல்வெளிகளினூடாக நடத்திச் செல்வதையும், எமது வாழ்க்கை வரண்டு போகின்ற தறுவாயிலெல்லாம் நம்மை நீர் நிலை நோக்கி இட்டுச் செல்கின்றதையும்' உணர முடியும். அவர் கூட இருக்கின்றபோது எவரும் எந்தத் தீங்குக்கும் அஞ்சுவதில்லை, எந்த எதிரிக்கும் பயப்படுவதில்லை. ஏனென்றால் உடலை வருத்தி உயிர் பறித்தாலும், ஆன்மாவைக் காத்து நிலை வாழ்வு தருவதற்கு எம் தலைவனாம் இயேசு இருக்கின்றார் என்கிற நம்பிக்கை – உறுதி, எமக்கு வாழ்வைச் சந்திக்கின்ற துணிவைத் தந்து கொண்டே இருக்கும்.


ஆண்டவரை அண்டி நிற்போர் பிழைப்பர் என்பதை நாம் மறந்து வாழ முடியாது. அவரைத் தலைவனாக வரிந்து கொள்ளுகின்ற நாம், அவர் காட்டும் முன்னுதாரணத்திற்குரிய வாழ்க்கையைக் கைக் கொள்ள வேண்டும். தீமையை நன்மைகளால் அவர் வென்றதைப் போல, நாமும் நன்மைகள் செய்து வாழ முற்படும்போது எமக்கெதிரானவற்றை வெற்றி கொள்ளும் நிலை உருவாகிவிடும். பல வேளைகளில் வாழ்வில் நாம் நினைத்தது நடக்காது போகும்போது 'நாமொன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நினைக்கிறது' என்று விரக்தி வசப்பட்டு கூறுகின்றோம். தெய்வம் நினைப்பது போல நாம் நினைக்கத் தலைப்பட்டு விட்டால், நாம் விரும்புகின்றவை அல்லவா நமக்கு நடக்கும்?

தெய்வத்தின் அலைவரிசையில் நாம் சிந்திக்க நமக்குத் துணையாக வழியாக, வழிகாட்டியாக இருப்பவர் இயேசுவே! நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய முடியும்.. தீமையைச் செய்து தீங்கினை விளைவாகப் பெறுகின்றபோது அதனால் எதையும் சாதித்து விட முடியாது. மாறாக, நன்மையைச் செய்கின்ற வேளையில் தீங்கினைப் பலனாக பெறுகின்றபோதும், அதைப் பொறுமையோடு சகித்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றபோதும், எமது வாழ்வு உயர்வடைகின்றது. இது வெறும் வார்த்தை சோடனைகளல்ல நமது தலைவனாம் கிறீஸ்து வாழ்ந்து காட்டிய பாதை இது! எமது வாழ்வுக்கு வழியும் இது!


எனவே நம்மை முற்றிலும் இறைவனுக்கே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவர் சித்தத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் வாழ்வை அமைத்துக் கொண்டு, உண்மைத் தொண்டனாக அமைந்து அவரை நன்றி கூறித் துதிப்போம்.


ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7