![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFjEu12_51QaH7Haw_8px8Lg2Mn14WDTDolw15W1kRuaEYUqoAhvewSYT0LctldGhf4V93IXaub0-x3ghx8gGAopMxDibGliNn1Y_tglWkRIIhwbNMBgD6gcpJSTepJd9RSwzloY6oEDs/s320/thattungal.com.jpg)
மோடி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லையென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சரத்பவார் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக இணைந்து செயற்பட எனக்கு அழைப்பு விடுத்தார்.
அவரிடம் நான், நமது தனிப்பட்ட உறவு நல்ல முறையில் இருக்கிறது. அது அப்படியே தொடர வேண்டும். ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறி விட்டேன்.
பாரதீய ஜனதாவை ஆதரித்து இருந்தால் என்னை நாட்டின் ஜனாதிபதி ஆக்குவதற்கு மோடி முன்வந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை.
இருப்பினும் பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் எனது மகள் சுப்ரியா சுலேவை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது.
அத்துடன் அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு ஆதரவு அளித்த தகவல் கிடைத்தவுடன் நான் முதலில் தொடர்புகொண்டது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவைதான். நடந்த சம்பவம் சரியல்ல. அஜித்பவாரின் செயலை நான் நசுக்குவேன் என நம்பிக்கை அளித்தேன்.
அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியவந்தவுடன் அவருடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. எனவே அவர்கள் திரும்பி வந்தார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிராவில் அரங்கேறிய பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு பின்னர் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்த கூட்டணி அமைய முக்கிய காரணம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)