
பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 8 பிரதேச செயலாளர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அடைமழை காரணமாக இதுவரையில் 1,651 குடும்பங்களைச் சேர்ந்த 5,774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேர் இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்து பிரிவு கூறியுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு மற்றும் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கர்பலாநகர் ஆகிய பகுதிகளிலேயே இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதுடன் சுகாதார பிரிவினரும் தமது சேவையை செய்துவருகின்றனர்.
இதேநேரம், கடும் மழையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதுடன் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏழு வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாவட்டத்தின் மூன்று பிரதான வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி, ராணமடு-மாலையர்கட்டு போக்குவரத்து பிரதான வீதி மற்றும் கிராண் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராணுக்கும் படுவான்கரைக்கும் இடையிலான போக்குவரத்து வீதிகளின் போக்குவரத்தே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பின் பிரதான குளங்களான உன்னிச்சைகுளம், நவகிரிகுளம், புலுக்குணாவகுளம் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
