‘பிகில்’ உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் மீறி ஒளிபரப்பினால், அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.கோவில்பட்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை. தீபாவளிக்குத் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதை மீறி சிறப்புக் காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பேற்காது.
அதேநேரம், அதையும் மீறி அந்தப் படத்தை அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் சிறப்பு காட்சியை அனுமதிக்க பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.





