![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Jrha9szn5pAAgf1deBsP_BH9HDEdweyE3G6lgcG_jmgCNzuR5Zc551kOb2giDWd6iyMAJuNR7uaUK5ybzIKBOPPc0xWKLijla1uFe_1E77DMnjmX4N0qYhenLrS2fCq3QPo3S4Qd6R8/s320/Police-release-sketch-1109-720x450.jpg)
விலேஜ் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, பொலிஸார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
குற்றவாளியின் மாதிரி வரைபடம் ஒன்றினை தயார் செய்து வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் 18இலிருந்து 23 வயதுக்கு உட்பட்ட, ஐந்து அடி 11 அங்குலத்திலிருந்து ஆறு அடி வரையில் உயரமுள்ள, மெல்லிய உடல்வாகு கொண்ட, கறுப்பு இன ஆண் என்று அதிகாரிகள் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த் சந்தேக நபரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல்களை வழங்குவோருக்கு 50,000 டொலர்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும், அதற்கான கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் அதிகாலை வேளையில வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயதான கீசிங்கர் கன் என்பவர், தனது மனைவி மற்றும் ஏனைய நண்பர்களுடன் பிறந்தநாள் வைபவம் ஒன்றிலிருந்து வெளியேறி தனது காரில் ஏறிப் புறப்பட இருந்த வேளையில், அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சிலர் சண்டையிடுவதைப் பார்த்துள்ளார்.
காரில் இருந்து இறங்கி மோதலில் ஈடுபட்டோரை நோக்கிச் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைகள் பலனின்றி சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டோரில் சிலரிடம் தகவல் சேகரித்ததன் அடிப்படையில், பொலிஸார், சந்தேக நபரின் மாதிரி வரைபடம் ஒன்றினை தயார் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து விபரம் வெளியிட்டுள்ள பொலிஸார், அங்கு என்ன நடந்தது என்பதையும், இந்தக் கொலையை யார் புரிந்தார்கள் என்பதனையும் நன்கு அறிந்தவர்கள் நிச்சயம் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)