![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNbyCaVO_tdbUYrVpuVOrNylH_udJWf1ipgCSHv0yNyo8yEwpIAVAT_7Z95Nam6X129C41R5BBr8n15FvFvZg4ydU978Egwj-qIt3M_S54DKBJusVTO21XKJTGoTUABR1dn4e60fmZSFE/s320/Angajan-2.jpg)
இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழிநடத்திய தென் கையிலை ஆதின முதல்வர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதத்தினாலும் கலாசாரத்தினாலும் ஒன்று எனக் கூறுபவர்களின் கபடத்தனமான செயற்பாடுகள் காரணமாக எமது இலக்கு நோக்கிய பயணங்கள் சிதைவுறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடனான சந்திப்பின் போது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் விகாரை அமைப்பதை தவிர்க்குமாறு கோரிய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “மதத்தினாலும் கலாசாரத்தினாலும் ஒன்று என கூறம் இவ்வாறான கபடத்தனமானவர்களின் செயற்பாடுகள் காரணமாக எமது இலக்கு நோக்கிய பயணங்கள் சிதைவுறுத்தப்படுகின்றது. அதேபோன்று எமது கலை கலாசாரங்களை மருவி இன்னொன்றை புத்துருவாக்கி கொள்வது உயிரோட்டமான ஆசீர்வாதத்தை வழங்காது.
இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் தனது தாயாருக்கு இறுதி கிரியைகளை செய்வதற்காக கன்னியா நீர் ஊற்றை உருவாக்கியதாக நம்பிக்கை காணப்படுகிறது. எனவே இவ்வாறன புண்ணிய பூமியில் அகிம்சை வழியில் போராட்டத்தை இணைந்து முன்னெடுத்த அகத்தியர் அடிகளார் மீது தேநீரால் ஊற்றிய காடையர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த பொலிஸாரின் செயற்பாடு சாபக்கேடுக்குரியது. அதன் விமோசனம் வலிகளை அறிந்து உரிய வழிகளை தோற்றுவித்தாலே அன்றி பிரதிபலிப்புக்கள் விபரீதமானதாகவே இருக்க செய்யும்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, போராட்டங்களின் மூலம் தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும், போராட்டங்களை ஆதரிக்கின்றோம் எனவும் கூறிய அவர், உரியவாறு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருக்குமானால் முழுமையான போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கபோவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)