
முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவானது. மேலும் முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு எதிராக அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் சட்டமூலம் நிறைவேறியுள்ளது.
முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்டமூலம், பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டமூலம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு பிணை கிடையாது என்ற சரத்து நீக்கப்பட்டது.
இதையடுத்து, மக்களவையில் சட்டமூலம் நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டமூலம் நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.
இதனால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்து, மக்களவை கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை சட்டமூலம் காலாவதி ஆகிவிட்டது.
அதன்பின்னர் மீண்டும் பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்களவையில் கடந்த 25 ஆம் திகதி மீண்டும் முத்தலாக் தடை சட்டமூலத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், திர்ணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து, முத்தலாக் தடை சட்டமூலம் மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவில் 303 உறுப்பினர்கள் ஆதரவும், 78 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தற்போது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் முத்தலாக் தடை சட்டமூலம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
