இந்நிலையில், வன்முறைகளை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்படவும், வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் மத்திய உட்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து உட்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், “தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமலும், அவ்வாறு நடந்தால் அதைச் சமாளிக்கும் வகையிலும் மாநில தலைமைச் செயலாளர்கள், பொலிஸ் ஆணையாளர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான சூழல் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மேலும், வி.வி.பி.ஏ.டி., வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும் தொடக்கத்தில் எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் நள்ளிரவு நேரத்தில் மாற்றப்படுகின்றன என்று வதந்தி பரவியதால், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினர் உ.பி., பிஹார் மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் காவல் காத்து வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் முடிவுகள் வரும் நாளன்று நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக உட்துறை அமைச்சகத்துக்கு தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.