வவுனியா பெரியகோமரசங்குளம் யேசுபுரம் பகுதியிலுள்ள சிறியமலை குன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமலையின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் இன்று(திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ஜேசுபுரம் பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் கலந்துரையாடியிருந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்,
“கோமரசங்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியினால் இப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்படைவதாக தெரிவித்து இரண்டாவது நாளாக உண்ணாவிர பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான் இங்கு விஜயம் செய்து இவ்விடங்களை பார்வையிட்ட போது ஒரு கல்குவாரி நடாத்துவதாக இருந்தால் பத்து வரையான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவை இங்கு கவனத்தில் எடுக்கப்படாமையால் மக்களிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கற்குவாரியில் உள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்த கோமரசங்குளம் கற்குவாரி செயற்படவில்லை. மேலும் இதற்கான அனுமதியினை மத்திய அரசுதான் வழங்கி வருகின்றது.
எனவே இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவுள்ளதோடு அதன் மூலமாக இதற்கான முடிவு வரும் வரை கற்குவாரியில் வெடிவைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.
எனவே அதற்கான வாக்குறுதியை நான் பொலிஸிடம் கோரியிருக்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.







