அலகுகளிலிருந்து தப்பி
திறந்து கிடந்த வீட்டின் இமைகளினூடாக
எனது அறைக்குள் நுழைகிறது
ஒரு மைனாக் குஞ்சு
அதன் கண்களில்
பயத்தின் பதபதப்பு வழிகிறது
உடன் அதனை பிடித்து
காயங்களுக்கு களிம்பு பூசுகிறேன்
விதம் விதமான பழங்களையும்
அன்பையும் பகிர்ந்தளிக்கிறேன்
கோடிப் புறத்தில் நிற்கும்
கொய்யாவில் அமர்ந்து தன் மகவை
தினமும் அதன் தாய் அழைப்பது
எனக்கு புரியாமலில்லை
அதன் மீது ஹயா வைத்திருந்த
பேரண்பின் நிமித்தம்
அதனை கூண்டில் அடைத்து விடுகிறேன்
அதன் எல்லையற்ற வானத்தையும்
அடர் வனங்களையும்
அடாத்தாகப் பறித்து வைத்துள்ளேன்
அதன் குற்ற உணர்வுகள்
என் மனசை உறுத்துகிறதுதான்
இருந்தும் ஹயா அதனோடு விடுமுறையை
அலாதியாக செலவிடுவது
என் கண்களை மறைத்து விடுகிறது
தாயைப் பிரிந்த ஏக்கத்தில் குஞ்சும்
குஞ்சை தவற விட்ட ஏக்கத்தில் தாயுமாக
குரலொளுப்பி கத்தியபடியே இருந்தன
உடன் பறித்டெுத்த அதன் வானத்தை
மீள ஒப்படைக்கிறதென் இளகிய மனம்
ஜமீல்