விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக மாகவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன் காரணமாக அடுத்த போகத்திற்கான பயிற்செய்கை நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என மாகவலி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பகுதிகளில் போதியளவில் மழைவீழ்ச்சி கிடைக்காதமையால் குறித்த நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைவடைந்துள்ளது.
இதனால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்து செல்வதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இவ்வருட ஆரம்பத்தில் 723 கனமீற்றர் கொள்ளளவினைக் கொண்டிருந்த குறித்த நீர்த்தேக்கமானது தற்போது 349 கனமீற்றர் கொள்ளளவு மட்டத்தினை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமானால் அடுத்த போகப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான அனவு நீர் கிடைக்காதமையால் போகத்திற்கான நெற்செய்கை உள்ளிட்ட பயிர்ச்செய்கை பெரிதும் பாதிப்படையும் என மாகவலி அதிகாரசபையின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்தாலும் அடுத்த போகத்திற்கான பயிர்ச்செய்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





