இலங்கை மேற்கத்திய நாடுகளால் தினம் தினம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு நாடு அல்ல என பிரித்தானிய பிரபுகள் சபை உறுப்பினர் லோர்ட் நெசபி தெரிவித்துள்ளார்.அத்தோடு இலங்கையை அதன் சொந்தக் காலில் இயங்குவதற்கு சர்வதேச நாடுகள் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றில் அவர் பேசிய விடயம் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை விரிவாக்குவதற்கான பிரேரணை 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இந்த பிரேரணையின் பரிந்துரை அமுலாக்கத்தக்கான கால நீடிப்பு கருதி 2017ம் மார்ச் மாதம் மற்றுமொரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணையின் நான்கு பொறிமுறைகளை நோக்கி சாதகமான அடிகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வைத்திருக்கிறது என்று லோர்ட் நெசபி கூறியுள்ளார்.
எனவே இன்னமும் இலங்கையை சர்வதேச நாடுகள் நாளாந்தம் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் இலங்கையை பிரித்தானியா நட்பு நாடாக அணுக வேண்டும் என்றும், இந்த நட்பு பிரக்ஸிற்றின் பின்னர் அவசியப்படும் என்றும் லோர்ட் நெசபி தெரிவித்துள்ளார்.





