கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜ.க. செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
தர்மபுரி மற்றும் கடலூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் இதில் பங்கேற்று உரையாடியிருந்தனர். இதன்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார்.
அதன்படி தமிழக நிர்வாகி ஒருவர், “நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. யாருடன் கூட்டணி அமைக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ரஜினி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டில் கூட்டணிக்கான வாசல் திறந்தே இருக்கிறது. பழைய கட்சிகளையும் வரவேற்க பா.ஜ.க. தயாராகவுள்ளது.
கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாய் வழியில் பா.ஜ.க. செயற்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணியை வெற்றிகரமாக நடத்தியவர் வாஜ்பாய். தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும் கூட்டணியோடு இணைந்தே பா.ஜ.க ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.





