கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம் (12) மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள சத்துணா ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது முதலில் ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் அடங்கிய யாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அதிலுள்ள குறை நிறைகள் தொடர்பில் பலராலும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ நிருவாக சபைத் தெரிவு இடம்பெற்றது.


நிருவாக தெரிவின்போது அனேகமான பதவிகளுக்கு இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டபோதிலும் ஒருவர் தாமாகவே குறித்த பதவியினை மற்றயநபருக்கு வழங்கிய மனிதாபிமான செயற்பாடு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது மூன்று மாவட்டத்தினையும் சேர்ந்த தற்காலிக நிருவாக சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பற்றுள்ளம் கொண்ட சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த வருடத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஆரம்பச் செயற்பாடுகள் இணைப்பாளர்களான செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் , சிரேஸ்ட சட்டத்தரணி கே.சிவநாதன் ஆகியோர் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் கிழக்கின் திருகோணமலை , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூட்டங்கள் நடாத்தப்பட்டு தற்காலிக நிருவாகங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆரம்பக் கட்ட செயற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையிலேயே இன்று ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் அரசியல் செயற்பாடு குறித்து கட்சிகள் அனைத்துக்குமான கூட்டம் நடைபெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் கட்சி அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கட்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் தமிழர் மகாசபை , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈ.பீ.டீபி ஆகிய கட்சிகள் கைச்சாத்திட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
