ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள், பொருளாதார பயங்கரவாதம் என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த மே மாதம் விலகிய அமெரிக்கா, ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
இந்த பொருளாதார தடைக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது.
குறிப்பாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.
இந்நிலையில், ஈரானில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில்
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி கலந்து கொண்டு அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அநியாயமான மற்றும் சட்டவிரோத பொருளாதார தடைகளானது, தங்கள் நாட்டை இலக்காகக் கொண்டுள்ள பயங்கரவாதம் என்றும் இது நாட்டின் சுதந்திரம் மற்றும் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் மீது தடைகள் விதிக்கும்போது, சர்வதேச வர்த்தக பலன்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
அத்தோடு, ஒவ்வொரு நாட்டின் மீதும் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் ஆணவமான போக்கை ஒருபோதும் சகித்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





