சென்னை யானைக்கவுனி, ஏழுகிணறு பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து, தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, நீலேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களது முக்கிய கூட்டாளியான ராஜஸ் தானை சேர்ந்த நசேஷ் சிங் (39) என்பவர், சவுகார்பேட்டை டிகேஜி கார்டன் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
போலீஸாரிடம் நசேஷ் சிங் கூறியதாவது:
எந்த வகையான பூட்டுகளையும் எளிதாக உடைத்துவிடுவேன். இதனால், கொள்ளையர்கள் என்னை அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர். பல கடைகள், வீடுகளில் நான்தான் பூட்டை உடைத்துக் கொடுத்தேன்.
ராஜஸ்தானில் இருந்து வந்த போது ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்தேன். சென்னையில் பகலில் தெருத் தெருவாக சென்று பைகள் விற்பேன். பிளாட்பாரத்திலும் விற்பனை செய்வேன். அப்போதே கடைகள், வீடுகளை நோட்டமிட்டு நண்பர்கள் உதவியுடன் திருடுவேன். தங்கசாலை மின்ட் தெருவில் ஜெயந்தி என்பவர் வீட்டில் ரூ.2 லட்சம் திருடினேன். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் எனது உருவம் பதிவாகிவிட்டது. அதில் இருந்தே தலைமறைவாக சுற்றத் தொடங்கினேன்.
துப்பாக்கியை வைத்து பெரிய அளவில் கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் போலீஸார் பிடித்துவிட்டனர்” என்று அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நசேஷ் சிங் கொடுத்த தகவலின் பேரில் யானைக்கவுனி வரதய்யன் தெருவில் வசிக்கும் கீடா பட் (33) என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிக்க வேண்டும்
தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளி மாநிலக் குற்றவாளிகளை கண்டறியும் தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை செயல் படுத்தி வருகிறது. ஆனால், தொழி லாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் தப்பிவிடுகின்றனர். அவர்களை போலீஸார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.