(ஜெ.ஜெய்ஷிகன்)
'மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி' என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9.25 மணிக்கு தேசிய பாதுகாப்பு தினம் தேசிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையில் வாழைச்சேனை பிரதேச செயலர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய பாதுகாப்பு நிகழ்வினை பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
சரியாக 9.25 மணிக்கு தேசியக் கொடியை பிரதேச செயலர் ஏற்றி வைத்ததன் பின்னர் தேசிய கீதத்தை அடுத்து 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிர்களை இழந்த அனைவருக்கும் ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலையமும் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் தேசிய பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளின் முக்கியமான செயற்பாடாக தேசிய பாதுகாப்பு தினம் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி – 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.
இன்று நடைபெற்ற பிரதேச செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில், கணக்காளர்.திருமதி.டிலானி ரேவதன், பதில் நிருவாக உத்தியோகத்தர் ஆர்பாஸ்கரன், அனர்த்த நிவாரணசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேஸ்குமார் பதவிநிலை உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
