சோமாலியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கனடா உதவவேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் சோமாலியாவுக்கான சிறப்புத் தூதர் மொஹமட் அப்டி அஃபே, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சோமாலிய உள்நாட்டு போர் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோரை அகதிகளாக்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருவதாகவும், உலகில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதிலும், அந்த அகதிகளை மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக மருத்துவ தேவையுடையோர், கணவனை இழந்த குடும்பங்கள் போன்ற, போர்ச் சூழ்நிலையில் அதிக பாதிப்பினை எதிர்நோக்குவோருக்கு உதவுமாறு அவர், கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.