மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதல் தடவையாக கணணி வலையமைப்பூடாக இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை பெற்றுக் கௌ;ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான மா.உதயகுமார் மாவட்ட ஊடகப்பிரிவுக்குத் தெரிவித்தார்.
பொது மக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இணையக் கணணி வசதியின் ஊடாக இந்த நாடளாவிய மற்றும் வெளிநாட்டில் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்பு பதிவுக வழங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த வசதிகளை பொது மக்கள் மாவட்ட செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
1960 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை எதிர்வரும் 29ம் திகதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும்.
இதே போன்று இலங்கையில் மாகாண ரீதியான வலய அலுவலகங்களிலும், மாவட்ட ரீதியில் மாவட்ட அலுவலகங்களிலும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை வழங்கும் இணையக் கணணி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை மாத்திரமே அங்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
